தொழில்துறையினர் முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றுள்ள முதல்வர்

 

தொழில்துறையினர் முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினை இந்தியத் தூதர் அமன் பூரி மற்றும் அந்நாட்டின் தொழில்துறையினர் விமான நிலையத்திலேயே வரவேற்றனர்.


கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி உலக எக்ஸ்போ கண்காட்சி துபாயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 6 மாதங்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி வரும் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.உலக எக்ஸ்போ கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை திறந்து வைக்க முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் துபாய் புறப்பட்டுச் சென்றார். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள், காற்றாலைகள் உட்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. சுருங்கக் கூறினால்,இந்த அரங்கிற்கு வருகை புரியும் அனைவரும், தமிழ்நாட்டின் அனைத்து சிறப்புகளையும் ஒரே இடத்தில் பார்வையிடும் அளவிற்கு, இந்த அரங்கம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த உலகக் கண்காட்சியில், இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில், பங்கேற்றிடும் ஒவ்வொரு நாட்டிற்கும், பிரத்தியேகமாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாபெரும் கண்காட்சியை சுமார் 2.50 கோடி பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.முதல்வரின் இந்த துபாய் மற்றும் அபுதாபி பயணத்தின் போது தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களுடனான சந்திப்பு, துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவர்களுடனான சந்திப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஐக்கிய அரபு நாடுகளுக்கும் தமிழ்நாட்டிற்குமான வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதுமே இந்த பயணத்தின் நோக்கமாகும். துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினை இந்திய தூதர் அமன் பூரி வரவேற்றார். மேலும், தொழில்துறையினரும் புலம்பெயர்ந்த தமிழர்களும் முதலமைச்சரை வரவேற்றனர். முதல்வருடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட அரசின் முக்கிய உயர் அதிகாரிகள் உடன் சென்றனர். துபாய் அரசு வழங்கிய பிஎம்டபிள்யூ வாகனத்தில் முதலமைச்சர், விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.